இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலி ஒருவர், தனது காதலியை, சிறை வளாகத்திலேயே அதிகாரிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.இலங்கையைச் சேர்ந்தவர் ராமைய்யா ரவீந்திரன்(38); விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். சட்ட விரோதச் செயலுக்காக கைது செய்யப்பட்ட இவருக்கு இலங்கை கோர்ட், பத்து ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனை, பின்னர் 15 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, கொழும்பு அருகே உள்ள வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.ரவீந்திரனின் பள்ளித் தோழி ரஞ்சனி. இவர், ரவீந்திரனை நீண்ட நாளாக காதலித்து வந்தார். இருந்தாலும், ரவீந்திரன் சிறையில் இருந்ததால், அவரை திருமணம் செய்ய முடியவில்லை. இந்நிலையில், சிறை அதிகாரிகளிடம் திருமணம் செய்வதற்கு முறையான அனுமதி பெற்றார்.இதையடுத்து, வெலிக்கடை சிறையில் ரவீந்திரனுக்கும், ரஞ்சனிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரவீந்திரன் வெள்ளை உடையும், ரஞ்சனி நீல நிற புடவையும் உடுத்தியிருந்தனர். ரஞ்சனியின் கழுத்தில், ரவீந்திரன் தாலி கட்டினார். சிறை அதிகாரிகள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.ரவீந்திரனுக்கு 2015ம் ஆண்டோடு தண்டனைக் காலம் முடிவடைகிறது. அதற்கு பின், ரஞ்சனியும், ரவீந்திரனும் மண வாழ்க்கையை தொடரவுள்ளனர்

0 comments:
Post a Comment